You are currently browsing the category archive for the ‘சொதி’ category.

>உணவில் கீரை இலையை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடலுக்கு இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும், தாமிரம் கல்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களும் தாராளமாகக் கிடைக்கும்.

இதனால் உடலும் நோய் எதிர்புச் சக்தி கொண்டதாக இருக்கும். இரத்த சோகை ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

நாளந்தம் வெவ்வேறு வகையான இலை வகைகளை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது. இப்பொழுது நகரங்களிலும் வண்டில்களில் விதவிதமான இலைக் கீரைகள் கூவிக் கூவி விற்பனையாகின்றன.


எமது முன்னோர் கீரையின் முக்கியத்துவத்தை அறிந்துதான் வீட்டைச் சுற்றிவரவும் பலவிதமான கீரை வகைகளை நாட்டி வைத்தனர். நாள் வீதம் அவற்றைச் சேர்த்து உண்டு நீண்ட காலம் நலமே வாழ்ந்தும் வந்தனர்.

சில கீரைவகைள் மருத்துவ உணவுகளாகவும் விளங்குகின்றன.

மருத்துவத்தில்

துளசி இலை, கற்பூரவல்லி, வெற்றிலை, என்பன சளித்தொல்லையை நீக்கும். நேரடியாகப் பறித்து உண்ணும் மருந்தாகவும் விளங்குகின்றன. சமையலிலும் இடம் பிடித்துள்ளன. அடை, சப்பாத்தி, கஞ்சி உணவுகளில் கலந்தும் சமைக்கலாம்.

துளசி இலைச் சாறு பருகுவதால் பன்றிக் காய்ச்சலைக் குணமாக்க முடியுமாம்.


புளியம் இலை, வேப்பம் இலையில் குருத்தை எடுத்து சட்னி செய்து கொள்ளலாம்.

பானமாக

அறுகம் புல் யூசாகவும் புல்லைக் காய வைத்து எடுத்து மல்லியுடன் கலந்து பவுடர் செய்து கோப்பிக்குப் பதிலாகவும் அருந்திக் கொள்வார்கள்.

வெங்காயத் தாரை, இஞ்சித் தாரை, கற்றாளை, எலுமிச்சம் இலை, தோடை இலை, கறுவா இலை, போன்ற இன்னோரின்ன இலை வகைகளும் சமையலில் இடம் பெறுகின்றன.

இறைச்சிக் கறிபோல

பனங்குருத்து, தென்னங் குருத்து, என்பவற்றிலும் கறி செய்து கொள்ளலாம். இறைச்சிக் கறிபோன்று இருக்கும்.

இறைச்சியை மெதுமையாக்க

ஆட்டிறைச்சி வெட்டியவுடன் மெதுமையாக இருப்பதற்காக பப்பாளி இலை, பனை ஓலை என்பவற்றில் சுற்றி வைத்திருப்பர். பப்பாளி இலை மற்றும் காய் என்பன இறைச்சியை மெதுமை அடையச் செய்யும் என்பர்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல்கள்

அண்மையில் பப்பாளி இலைச் சாறு டெங்குக் காச்சலின் போது வெண்குருதி சிறுதுணிக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் என இலங்கை மருத்துவர்கள் சிலர் அண்மையில் ஆய்வு செய்து கண்டறிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல குஜராத் ஆயுர்வேத பலகலைக்கழக ஆய்வு பன்றிக் காய்சலுக்கு காரணமான வைரசையும் மற்றெந்த வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் துளசிக்கு இருப்பதாகக் கூறுகிறது.

விருந்தோம்ப

ஆதிகாலம் தொட்டு வாழை இலை, தாமரை இலை விருந்து ஓம்பினர். பலா இலை, ஆலம் இலை, பன்னீர் இலை என்பவற்றில் தொன்னை செய்து உணவு உண்டனர்.

சமையலில் உதவியாக

பூவரசம் இலையில் வடை, அரியதரம் தட்டிப் பொரிப்பர்.

சிற்றுண்டி வகைகள் காயாமல் இருக்க மூடல்ஓலைப் பெட்டியின் அடியில் இவ்விலைகளைப் பரப்பி அதன் மேல் உணவை வைத்து மூடி வைப்பர். இலை வாசம் சிற்றுண்டியிலும் பரவி சுவையைத் தரும்.

இட்லி அவிக்க முள்முருக்கம் இலையைப் பயன்படுத்தினர். இட்லி மென்மை அடைவதுடன் இலையின் மணமும் கூடி வரும்.

யப்பானியர் தேயிலை இலையை பச்சையாகவே அருந்தும் வழக்கம் உள்ளவர்கள். அவர்களது நீண்ட வாழ்க்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்பர். இப்பொழுது உலகெங்கும் கிறீன் ரீயின் புகழ் பரவி வருவது தெரிந்ததே.

அழகு சாதனமாக

தற்பொழுது ஹேர்பல் அழகு சாதனமாகவும், மருத்துவ குணமுடையதாகவும் பிரசித்தம் உள்ளதை எல்லோரும் அறிந்து உள்ளீர்கள்தானே.

இராமாயணத்தில் அனுமார் சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்ததாக கதை உண்டு. இலைகளும் அவற்றின் பயன்களும் அறிந்த நாம் அவற்றை கூடுதலாக உணவுகளில் சேர்த்து உண்டு ஆரோக்கியமாக வாழலாமே.

இன்று முருங்கையிலை விருந்து


முருங்கை இலை 100 கிறாமில் –
கலோரி 92, புரதம் 6.7, கொழுப்பு 1.7, கல்சியம் 440, இரும்பு 7, கரட்டீன் 3600, விட்டமின் சீ 220 என சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

முருங்கைக் கீரை பால் சொதி

முருங்கைக் கீரை – 1 கப்
சின்ன வெங்காயம் – 6,7
இளம் சிவப்பான பச்சை மிளகாய் – 4 (பச்சை நிறத்துடைய மிளகாயைத் தவிர்த்து இளம் சிவப்பு மிளகாய் சேர்துக் கொண்டதும் முருங்கை இலையை எடுத்துச் சாப்பிடும் போது மிளகாயை இலகுவாக எடுத்து அகற்றலாம்.)
2தேங்காய்ப் பால் – 2 கப்
தண்ணீர் – ¼ கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால்
தேசிச்சாறு – 1 தேக்கரண்டி

தாளிக்க விரும்பினால்

கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – ½ ரீ ஸ்பூன்

இலையைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளமாக வெட்டி வையுங்கள்.

பச்சை மிளகாய்களை வாயைக் கீறிவிடுங்கள்.

பாத்திரத்தில் இவற்றைப் போட்டு உப்பிட்டு தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடங்கள் இலை அவியும் வரை அவிய விடுங்கள்.

அவிந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கிவிடுங்கள். பால் திரளாமல் இருக்க சில துளிகள் எலுமிச்சம் சாறு சேர்த்து கலக்கி கொதிக்கவிடுங்கள்.

அடிக்கடி கலக்க வேண்டும்.

கொதித்துவர இறக்கி கோப்பையில் ஊற்றி மீதி தேசிச் சாறை கலந்து கலக்கி விடுங்கள்.


முருங்கைக் கீரை வாசத்துடன் தேங்காய்ப் பாலின் மணமும் சேர்ந்து உண்ண அழைக்கும்.

தாளிக்க விரும்பினால் தாளித்துக் கொட்டி கலக்கிவிடுங்கள்.

சாதம், பிட்டு, இடியாப்பம், பாண் ஆகியவற்றிற்கு ஊற்றிச் சாப்பிட அருமையாக இருக்கும்.

விரும்பினால் பூண்டு, மிளகு தட்டிப் போட்டுக் கொண்டால் சற்று மாறுதலான சுவை கிடைக்கும்.

அகத்தி, முல்லை இலை, முசுட்டை இலை, கீரைத் தண்டு, தூதுவளை இலை, பொன்னாங்கண்ணி இலை மணத்தக்காளி இலை என்பவற்றிலும் இது போன்ற சொதி செய்து கொள்ளலாம்.

மீன் சொதியிலும் கலந்து செய்து கொள்ளலாம்.

மாதேவி

>கெட்டபோல் எறிதல், கல்லெறிதல் இவை தெரியாது வளர்ந்த சிறுவர்கள் இருக்க முடியுமா?

மாங்காய், புளியங்காய், இலந்தை, விளாம்பழம், கொய்யா இவற்றுடன் நெல்லிக் காய்க்கு எறிந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக் கூடும்.

சிறுவர்கள் எல்லோருமே மிகவும் விரும்பி உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்று. அரை நெல்லி என்று இங்கே அழைப்போம். தமிழ்நாட்டில் அரு நெல்லி என அழைப்பீர்களா?

இங்கு பொது சந்தையில் சிறிய பைகளில் இருபது ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.

காய் பழங்களிலே அதி கூடிய விட்டமின் சீ (Vit C) சத்துடையது இதுவாகும். இதில் 600 மி.கி அளவு விற்றமின் சீ இருப்பதாக தெரிகிறது. ஏனைய சத்துக்கள் மிகக் குறைவே.

இதை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் விட்டமின் சீ பெற்று நோயெதிர்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதிக புளிப்புத் தன்மையுடையதால் ஒரு சில காய்களுக்கு மேல் சாப்பிட முடியாது போகும். எனவே சமையலிலும் பயன்படுத்தலாம்.

இவற்றை சமைக்கும்போது விற்றமின் சீ சேதமடையும் என்ற போதும் அதனின்று கிடைக்கும் குறைந்தளவிலான ஏனைய சத்துக்களையாவது பெற்றுக் கூடியதாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்டு சிரப், கோடியல்களாகவும் கிடைக்கின்றன. உப்பிட்டு வெயிலில் உலர்த்தி வற்றலாகவும் தொக்கு, அச்சாறு, ஊறுகாய், முரப்பா, ஜாம், எனப் பலவாறு தயாரிக்கலாம்.

நேரடியாக தேங்காய்ச் சட்னி, ஏனைய சட்னி வகைகளுடன் கலந்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

வெஜிட்டபிள் சலட், புரூட் சலட் இவற்றில் சொப் செய்து கலந்து கொள்ளலாம்.
ரசம், சொதி தயாரித்துக் கொள்ளலாம்.

மாங்காய் சாதம் போன்று இதிலும் செய்து கொள்ளலாம்.


சாதம், புட்டு, இடியப்பம் ஆகியவற்றிற்கு மெல்லிய புளிப்புடன் கூடிய நெல்லி பாற் சொதி நல்ல சுவையைக் கொடுக்கும்.

சேகரிக்க வேண்டியவை

நெல்லிக்காய் பெரியது – 6-7 (சிறியது 10-15)
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 6-7
வெந்தயம் – ¼ ரீ ஸ்பூன்
சீரகம் ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள்பொடி விரும்பினால்
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் – 2 கப்
தண்ணித் தேங்காய்ப் பால் – ¼ கப்

தாளிக்க

செத்தல் 1
கடுகு சிறிதளவு
சின்ன வெங்காயம் – 2
கறிவேற்பிலை – சிறிதளவு
ஒயில் – 1 ரீ ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயைக் கழுவி இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய், வெங்காயம், நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் நெல்லிக்காய்த் துண்டுகள் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வெந்தயம், சீரகம், உப்பு, கறிவேற்பிலை, தண்ணிப்பால் விட்டு அவிய வையுங்கள்.

ஒருகொதி வந்ததும் கிளறிவிடுங்கள்.

அவிந்ததும் கெட்டிப்பால் விட்டு கலக்கி இரு கொதி வர இறக்கி விடுங்கள். (பால் மேலே திரையாதிருக்க அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள்.)

தாளித்து போட்டுக் கலந்து விடுங்கள்.

……… மாதேவி ………..

>
காலைத் தூக்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. இதமான மெல்லிய குளிர் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க ஆழ்ந்து உறங்குவதிலுள்ள சுகம் எழுத்தில் சொல்லி மாளாது.

அவ் உறக்கத்தின் ஊடே அம்மாவி்ன் அம்மாவின் கைமணமும் சேர்ந்து வருமே அடுக்களையிலிருந்து. முட்டைப் பொரியலின் மணமும் அதனுடன் கூடிய பாற்சொதியின் வாசமும் சேர்ந்து மூக்கைத் துளைக்க தூக்கம் தானே பறக்கும். வயிறு எழ ஆரம்பிக்கும்.

‘இன்று என்ன சாப்பாடு என்ற எண்ணமும் பிறக்குமே’. அதற்குள் மிளகாய் வறுத்த கார வாசமும் எழ புரிந்துவிடும்.

ஐ . . . இடியாப்பம்.
உரலின் ஓசை உறுதிப்படுத்தும்.

அடி சக்கை இடிசம்பலும் கிடைக்கும்போல!

இடியப்பத்திற்குள் நாமும் செல்வோமா?

இடியப்பம்
தேவையான பொருட்கள்

வறுத்த அரிசிமா -2 கப்
அவித்த மைதாமா – 1/4 கப்
உப்பு சிறிதளவு
கொதிநீர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆவி பறக்கும் சூட்டில் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறி இறுக்கமான மாவு தயாரித்து எடுக்கவும்.

இட்லிப் பாத்திரம் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு, ஸ்ரிம் தட்டு போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க வையுங்கள். இடியப்ப உரலை எடுத்து மாவை வைத்து தட்டுக்களில் பிழிந்து வையுங்கள். அழகாக வட்டம் போல சுற்றுங்கள். இரண்டு தடவை மட்டும் சுற்றினால் சிறிதாக, பார்வைக்கும் உண்பதற்கும் இதமான அளவில் இடியப்பம் இருக்கும்.

தண்ணீர் கொதித்ததும் பிழிந்த இடியப்பங்களை அவித்து எடுங்கள். 5-7 நிமிடங்கள் வரை அவியவிட்டால் பதமாக இருக்கும்.

ஐ! இடியப்பம் தயார். சாப்பிடக் கூப்பிடுங்க.

குறிப்பு :- வெள்ளை அரிசி மாவாக இருந்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். ஆனால் சிவத்த மாவில் செய்தால் தவிட்டுச் சத்தும் சேர்வதால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவித்த மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். கொதிநீரை சற்று ஆறவிட்டு மாவைக் குழைத்தால்தான் இடியப்பம் பதமாக வரும்.

மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் – 5,6 துண்டுகள்
கரட் – சின்னது – 1
உருளைக்கிழங்கு – 1
போஞ்சி – 5,6
தக்காளிப்பழம் – 2
சின்ன வெங்காயம் – 6,7 அல்லது பெரிய வெங்காயம் பாதி
பச்சை மிளகாய் – 4
தேங்காய்த் துருவல் – 2 கப்
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு –
1/4 தேக்கரண்டி
தேசிச்சாறு –
1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு (விரும்பினால்)
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை –
சிறிதளவு

தாளிக்க விரும்பினால்

கடுகு – 1/4 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு –
1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2
தேக்கரண்டி

செய்முறை

மரக்கறிகளை சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள். வெங்காயத்தையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். மிளகாயை நீளவாட்டில் பிளந்து விடுங்கள்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள். திரும்ப ஒரு கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து பால் கோப்பையில் கலந்துவிடுங்கள்.

அடுப்பில் வைக்கும் பாத்திரத்தில் தக்காளி தவிர்ந்த ஏனைய மரக்கறிகளைப் போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம், சோம்பு, கறிவேற்பிலை, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அவியவிடுங்கள். முக்கால் பாகம் அவிந்ததும் தக்காளியைச் சேர்த்து விடங்கள். இரண்டு நிமிடம் அவிந்ததும் தேங்காயப் பாலை ஊற்றி கலக்கிவிடவும்.

பால் திரளாமல் இருக்க அரை தேக்கரண்டி எலுமிச்சம்சாறு சேர்த்து கொதிக்கிடுங்கள். அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள். கொதித்துவர இறக்கி பரிமாறும் கோப்பையில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

தாளிக்க விரும்பினால் தாளிதத்தை கலந்து விடுங்கள்.

கமகமக்கும் பால் சொதி தயார்

கிழங்கு தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

தக்காளி – 500 கிராம்
அவித்த உருளைக்கிழங்கு – 4
பெரிய வெங்காயம் -2
பச்சைமிளகாய் – 1
தேங்காய்த் துருவல் – 1 1/2 கப்
மிளகாய்ப் பொடி- 1 தேக்கரண்டி
தனியாபபொடி – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்கத் தேவையானவை

தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சோம்பு –
1/4 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
உள்ளி பேஸ்ட் சிறிதளவு
ரம்பை 1 துண்டு
கறிவேற்பிலை –
சிறிதளவு

செய்முறை

தக்காளி கிழங்கு இரண்டையும் துண்டங்களாக தனித்தனியே வெட்டி வையுங்கள். வெங்காயம் சிறியதாகவும், பச்சை மிளகாயை இரண்டு தண்டங்களாகவும் வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள்.
திரும்ப ஒரு கப்
தண்ணீர் விட்டு பால் எடுத்து பிறிதொரு கோப்பையில் எடுத்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருட்களை மேலே சொன்ன வரிசையில் தாளியுங்கள். இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய், தக்காளித் துண்டங்கள் போட்டு ஒரு நிமிடம் கிளறுங்கள். உப்பு, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிழங்கையும் போட்டு தனியே எடுத்து வைத்த பால் விட்டு மூடி போட்டு 5-7 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். மூடியைத் திறந்து கெட்டிப்பால் ஊற்றி விடுங்கள்.

கொதித்துவர கிளறி இறக்கி பரிமாறும் கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.
மிளகாயத்தூள் வாசம் கமழ குழம்பு அழைக்கும்.