>கெட்டபோல் எறிதல், கல்லெறிதல் இவை தெரியாது வளர்ந்த சிறுவர்கள் இருக்க முடியுமா?
மாங்காய், புளியங்காய், இலந்தை, விளாம்பழம், கொய்யா இவற்றுடன் நெல்லிக் காய்க்கு எறிந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக் கூடும்.
சிறுவர்கள் எல்லோருமே மிகவும் விரும்பி உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்று. அரை நெல்லி என்று இங்கே அழைப்போம். தமிழ்நாட்டில் அரு நெல்லி என அழைப்பீர்களா?
இங்கு பொது சந்தையில் சிறிய பைகளில் இருபது ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.
காய் பழங்களிலே அதி கூடிய விட்டமின் சீ (Vit C) சத்துடையது இதுவாகும். இதில் 600 மி.கி அளவு விற்றமின் சீ இருப்பதாக தெரிகிறது. ஏனைய சத்துக்கள் மிகக் குறைவே.
இதை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் விட்டமின் சீ பெற்று நோயெதிர்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.
அதிக புளிப்புத் தன்மையுடையதால் ஒரு சில காய்களுக்கு மேல் சாப்பிட முடியாது போகும். எனவே சமையலிலும் பயன்படுத்தலாம்.
இவற்றை சமைக்கும்போது விற்றமின் சீ சேதமடையும் என்ற போதும் அதனின்று கிடைக்கும் குறைந்தளவிலான ஏனைய சத்துக்களையாவது பெற்றுக் கூடியதாக இருக்கும்.
பதப்படுத்தப்பட்டு சிரப், கோடியல்களாகவும் கிடைக்கின்றன. உப்பிட்டு வெயிலில் உலர்த்தி வற்றலாகவும் தொக்கு, அச்சாறு, ஊறுகாய், முரப்பா, ஜாம், எனப் பலவாறு தயாரிக்கலாம்.
நேரடியாக தேங்காய்ச் சட்னி, ஏனைய சட்னி வகைகளுடன் கலந்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
வெஜிட்டபிள் சலட், புரூட் சலட் இவற்றில் சொப் செய்து கலந்து கொள்ளலாம்.
ரசம், சொதி தயாரித்துக் கொள்ளலாம்.
மாங்காய் சாதம் போன்று இதிலும் செய்து கொள்ளலாம்.
சாதம், புட்டு, இடியப்பம் ஆகியவற்றிற்கு மெல்லிய புளிப்புடன் கூடிய நெல்லி பாற் சொதி நல்ல சுவையைக் கொடுக்கும்.
சேகரிக்க வேண்டியவை
நெல்லிக்காய் பெரியது – 6-7 (சிறியது 10-15)
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 6-7
வெந்தயம் – ¼ ரீ ஸ்பூன்
சீரகம் ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள்பொடி விரும்பினால்
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் – 2 கப்
தண்ணித் தேங்காய்ப் பால் – ¼ கப்
தாளிக்க
செத்தல் 1
கடுகு சிறிதளவு
சின்ன வெங்காயம் – 2
கறிவேற்பிலை – சிறிதளவு
ஒயில் – 1 ரீ ஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காயைக் கழுவி இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், வெங்காயம், நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் நெல்லிக்காய்த் துண்டுகள் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வெந்தயம், சீரகம், உப்பு, கறிவேற்பிலை, தண்ணிப்பால் விட்டு அவிய வையுங்கள்.
ஒருகொதி வந்ததும் கிளறிவிடுங்கள்.
அவிந்ததும் கெட்டிப்பால் விட்டு கலக்கி இரு கொதி வர இறக்கி விடுங்கள். (பால் மேலே திரையாதிருக்க அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள்.)
தாளித்து போட்டுக் கலந்து விடுங்கள்.
……… மாதேவி ………..
2 comments
Comments feed for this article
26/02/2009 at 2:04 PM
newspaanai
>Thank you for the receipe. Please post them in http://www.newspaanai.com and invite more readers to your blog. It is a tamil social bookmarking website and it has a separate receipecorner for receipes. For easy posting of your articles with once click of a button please visit http://www.newspaanai.com/easylink.php
01/03/2009 at 4:12 PM
மாதேவி
>நியூஸ்பண்ணையில் post செய்ய அழைத்ததற்கு நன்றி